மீண்டும் நடிக்க வந்த சரிதா

ரஜினிகாந்தின் தப்பு தாளங்கள் படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் சரிதா. அச்சமில்லை அச்சமில்லை, மவுன கீதங்கள், தண்ணீர் தண்ணீர், மலையூர் மம்மட்டியான் உள்பட தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆன சரிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து இருக்கிறார்.

இதுகுறித்து சரிதா கூறும்போது, “எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தேன். மாவீரன் கதை பிடித்ததால் நடித்தேன்.

படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் என்னிடம் பாசமாகவும், மரியாதையுடனும் பழகினார்.

படக்குழுவினர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெருமை அளிப்பதாக உள்ளது.

ரஜினியுடன் தப்பு தாளங்கள், நெற்றிக்கண், சிவப்பு சூரியன், உள்பட பல படங்களில் நடித்துள்ளேன்.

இதனால் அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும். இப்போது சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்ப்பதுபோலவே இருக்கிறது” என்றார்.

Related posts