டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. “டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை மிகவும் வருந்ததக்கது.
அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் அளித்துள்ளார். நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கபப்ட்டுள்ளார்.
மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜய்குமார் எடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை என்பதால் அதனை போலீஸ் தலையிட முடியாது எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-2 முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார்.
கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பணி சுமை காரணம் இல்லை என்றும் மன உளைச்சல் காரணமாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
திரு. விஜயகுமார் அவர்கள் தனது பனிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts