மாகாணசபை தேர்தலை நடத்தாதிருப்பது தவறு

தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வது நல்ல விடயம். ஆனால், சீர்திருத்தம் செய்யப்படவில்லை என்பதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் (14) நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்பி: தமிழரசுக்கட்சியின் யாப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். அது தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றை உள்ளடக்கிய புதிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதற்கென

புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விடயங்கள் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்துள்ளோம். முழு ஆவணத்தையும் பார்ப்பதற்கு இன்று நேரம் போதவில்லை. பிறிதொரு தினத்தில் இது தொடர்பில் ஆராயப்படும். ஜனாதிபதியுடனான எமது சந்திப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களே பேசப்படுமென சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக எழுத்து வடிவிலும் அவருக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும். வெறுமனே சட்டங்களை திருத்தி விட்டு மாகாண சபைகள் இயங்காமல் விட்டிருப்பதில் அர்த்தமில்லை.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விடயத்தை ஒரு கட்சி செய்துள்ளது. தனிநபர் சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அதனை சிங்களத் தரப்பை சேர்ந்த இருவர் சவாலுக்குட்படுத்தினர். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பில் ஒரு விவாதம் நடைபெற்றது.

அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை பாராளுமன்றுக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கும். இந்த சட்டமூலத்தை அமுல்படுத்தினால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த முடியும். அவ்வாறு நடந்தால், பழைய தேர்தல் முறையிலேயே நடைபெறும்.

இதேவேளை, மஹிந்தவை பிரதமராக நியமிக்க போவதாக ஒரு வதந்தி பரவியது. அப்படி நடந்தால் கடந்த வருடம் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த கூடும்.இந்தப் பயத்தினாலேயே, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவ்வாறுதான்,நம்பத் தோன்றுகிறது.

திருகோணமலையில் பதற்றம் ஒன்று நிலவியது. இந்த விடயம் தொடர்பாக சம்பந்தன், ஜனாதிபதியிடம் முன்னரே கூறியிருந்தார். அங்கு சிலைகளை வைக்க அனுமதிக்கப்போவதில்லை என, ஜனாதிபதி எமக்கு தெரிவித்திருந்தார். சிலை வைக்கப்படவில்லை என்ற செய்தி இன்று எமக்கு கிடைத்துள்ளது.

Related posts