சாய்பல்லவி பகிர்ந்த காதல் அனுபவம்

நடிகை சாய்பல்லவி காதல் குறித்து தன் மனதில் உள்ள விருப்பத்தை மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார் சாய்பல்லவி.

இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், “நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் ஒருவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த விஷயத்தை அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காதல் கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை அவனுக்கு எப்படி கொடுப்பது என்று தெரியாமல் புத்தகத்தில் வைத்துக்கொண்டேன்.

எதிர்பாராமல் என் அம்மா கண்ணில் அந்த கடிதம் பட்டு அளவு கடந்த கோபம் வந்துவிட்டது. என்னை செமையாக அடித்து விட்டார். அம்மா அடித்தது அதுதான் முதல் முறையும், கடைசி முறையும். இப்போது வரை மீண்டும் என் அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை.

நம்மை எவ்வளவோ செல்லமாக பார்த்துக்கொண்டு நிலாவை காட்டி சோறு ஊட்டிய தாயாக இருந்தாலும் அவரது கையில் அடிவாங்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஹீரோதான்” என்றார்.

Related posts