சூடானில் ராணுவ மோதல்; இந்தியர் உள்பட 56 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது. இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் நிதானமாக செயல்பட வேண்டும் எனவும், வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 170 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரித்து உள்ளது. அவர்களில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

Related posts