தோல்விக்கு நானே காரணம்

கடந்த 2021-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், கேத்ரீனா கைப் நடித்த ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான ‘ரக்ஷா பந்தன்’, ‘சாம்ராட் பிரித்விராஜ்’ ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன.

‘ராம்சேது’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பட்ஜெட்டை விட குறைவான வசூலையே பெற்றது. இந்த நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் ‘செல்பி’ திரைப்படம் வெளியானது.

இந்த படம் முதல் நாளில் ரூ.2.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது;- “இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரைப்பயணத்தில் ஒரே நேரத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன. படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். எனது தவறு தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர். நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாகவேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அலராம் தான் அது. நான் மாற முயல்கிறேன். இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.”

Related posts