இந்தியாவை கொள்ளையடிக்கும் அதானி குழுமம்- ஹிண்டன்பர்க்

பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதேபோல் உலக பெரும்கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை 413 பக்க அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், இது குறிப்பிட்ட அதானி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல.

மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல். ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடை படுகிறது என்று அதானி குழுமம் அறிக்கைக்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், தேசியம் எனும் போர்வையில் தன்னை சுற்றிக்கொண்டு மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது அதானி குழுமம். இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் நல்ல எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசாகும்.

அதே சமயம், இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை முறையாக கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடை படுகிறது.

Related posts