இந்திய இசை கருவிகளின் விற்பனை அதிகரிப்பு

பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வழியே மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

இதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசினார். இது 95-வது நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என கூறினார்.

இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர். அம்ரித் கால் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்.

ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இசை கருவிகள் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகரித்து உள்ளது. இதில் இருந்து இந்திய பாரம்பரிய இசை மீது உலக நாடுகள் கொண்ட ஆர்வம் வெளிப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், இசை கருவி ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்து உள்ளது. மின்சார இசை கருவிகளின் ஏற்றுமதியும் 60 மடங்கு அதிகரித்து உள்ளது. உலகம் முழுவதும் இந்திய கலாசாரம் மற்றும் இசை மீதுள்ள ஈடுபாடு அதிகரித்து இருப்பதற்கான அடையாளமிது என்று பேசியுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய வளர்ந்து வரும் நாடுகள் பெரிய அளவில் இந்திய இசை கருவிகளை வாங்குபவர்களாக உள்ளனர் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related posts