ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு

ஆசியாவின் மிக பெரிய திரைப்பட திருவிழா என்ற பெருமையுடன் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் இன்று தொடங்கியுள்ளது.

அடுத்த 8 நாட்களுக்கு இந்த திருவிழாவின்போது உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த திருவிழாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பெண்களிடம் இருந்து 40 சதவீத பணிகள் வெளிவருகின்றன என கூறினார். திருவிழாவில் கலந்து கொள்வதில் பெருமையாக உணர்கிறேன் என நடிகர் அஜய் தேவ்கன் கூறினார்.

உலகம் முழுவதிலும் இருந்து பட இயக்குனர்கள் வருகை தந்து தங்களது திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய திரைப்பட திருவிழாவை நாம் நடத்துகிறோம் என்பது பெருமைக்கு உரிய விசயம் என நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

இந்த 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்து உள்ளார்.

ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்பு துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்று உள்ளார் என மத்திய மந்திரி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related posts