படம் தோல்வியால் பக்குவப்பட்ட நடிகர்

லைகர் படம் தோற்றாலும் ஒரு நடிகனாக எனக்குள் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கி பக்குவப்பட வைத்துள்ளது” என விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி வெற்றியால் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில், ”சினிமா துறையில் வெற்றி, தோல்வி என்பது சர்வ சாதாரணம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தவறுகள் நடக்கும்.
எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. இப்போது பான் இந்தியா அளவிலான படம் செய்யும் அளவுக்கு நான் வளர்ந்தது பெரிய விஷயம். லைகர் படத்திற்காக மிகவும் உழைத்தேன்.
ஆனால் அந்த படம் எனது நம்பிக்கையை தகர்த்தது. வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் உழைப்பது மட்டுமன்றி சில வித்தியாசமான முயற்சிகளையும் செய்ய வேண்டும். அப்படி செய்யும் முயற்சிகள் சிலமுறை வெற்றியடையலாம்.
சிலமுறை தோல்வியில் முடியலாம். ஆனால் முயற்சி செய்வது என்பதுதான் முக்கியம். லைகர் படம் கூட ஒரு வித்தியாசமான முயற்சிதான். அந்த படம் தோற்றாலும் ஒரு நடிகனாக எனக்குள் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கி பக்குவப்பட வைத்துள்ளது” என்றார்.

Related posts