வெறும் 226 பேர் இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர்!

2.1 கோடி மக்கள் வாழும் நாட்டை 226 பேர் மண்டியிட வைத்துள்ளனர் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் ஹெஷான் டி சில்வா உடன் நடந்த நேர்காணில் பேசிய சங்கக்காரா கூறியதாவது:-

நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை.

நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு, மக்களுக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை.

இதே அரசியல்வாதிகளை வேறு வேறு துறைக்கு மாற்றி பணியமர்த்துவதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை, இதனால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப்பேவாதில்லை.

தெருவில் போராடி கொண்டிருப்பவர்கள் புதிய தலைமுறை இளைஞர்கள். கூடுதல் விழிப்புணர்வுடன், விவேகத்துடன், உறுதிப்பாடுடன் மற்றும் அச்சமற்ற ஒரு புதிய சமுதாயம் ஒன்றுபட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

இலங்கை, இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனவாதம் மற்றும் மதப் பிளவு சமூகம் அல்லது அரசியலில் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.

ஊழலுக்கும், உறவுமுறைகளுக்கும், இலங்கை மக்களின் முதுகில் குடும்ப வம்சத்தை கட்டியெழுப்புவதற்கும் இடமளிக்கக் கூடாது எனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

Related posts