அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து, கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கடந்த 8ந்தேதி அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட மறுத்த ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றி அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சைக்கு பதிலளித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் (ஐஆர்எஃப்) “கர்நாடக ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துகிறது மற்றும் ஒதுக்கி வைப்பதாகவும் இருக்கிறது” என்று நேற்று தெரிவித்துள்ளது.

ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுக்க்கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக்கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது என பதிவிட்டுள்ளார்.

Related posts