அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆவல் ..

அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆவலாக இருப்பதாக பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேட் ‘புஷ்பா’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
‘புஷ்பா’ பார்த்தேன். உண்மையான ப்ளாக்பஸ்டர் திரைப்படம். மிகச் சிறப்பான, உற்சாகம் மிகுந்த படம். அன்புள்ள அல்லு அர்ஜுன், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். உங்களுடைய ஒவ்வொரு நுணுக்கமான நடிப்பையையும் ரசித்தேன். விரைவில் உங்களுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் ஒரு பெரிய வாழ்த்து. ஜெய் ஹோ!

இவ்வாறு அனுபம் கேர் கூறியுள்ளார்.

Related posts