சர்வதேச திரைப்பட விழா 3 விருதுகளை அள்ளிய ஜெய் பீம்

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இதனை இயக்கி உள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன. தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் வெளிவந்தன.

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் 9வது நொய்டா சர்வதேச திரைப்பட திருவிழா 2022ல் மூன்று விருதுகளை வென்றுள்ளது. அதன்படி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ் தேர்வாகி உள்ளனர். அதனுடன், சிறந்த படத்திற்கான விருதும் ஜெய்பீம் பெற்றுள்ளது.

Related posts