உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சேலத்தில் மாற்றுத்திறனாளி கைதி மர்ம மரணம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவருடைய மனைவி கம்சலா (32), அரூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், நடராஜன், இவருடைய மனைவி லலிதா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் மாற்றுத்திறனாளி பிரபாகரன், கம்சலா, மதிவாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நடராஜன், அவருடைய மனைவி லலிதா ஆகியோரை தேடி வருகின்றனர். கடந்த 11-ந் தேதி பிரபாகரன் நாமக்கல் கிளை சிறையிலும், கம்சலா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் பிரபாகரனுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 12-ந் தேதி நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கியதால்தான் பிரபாகரன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) உடனடியாக சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவரையும், தலைமைக் காவலர் ஒருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த சம்பவம் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், ஆணையிட்டுள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையைக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts