சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு

ஜதிரத்னலு’ இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘டாக்டர்’ கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இது தவிர ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது.
தற்போது தான் நடிக்கவுள்ள 20-வது படத்தின் இயக்குநர் அனுதீப் என்பதை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

Related posts