இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று (12) இலங்கை வந்துள்ளார்.

ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் விஷேட அழைப்பின் பேரில் இன்று இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவுடன் அவரது பாரியார் வீணா நரவானே, இந்திய இராணுவ தலைமையக பயிற்சி பிரிவின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இராணுவ உதவியாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், மற்றும் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன் ஆகியோர் அடங்கிய குழுவினரே வருகை தரவுள்ளனர்.

நாளை (13) அக்குரேகொடை பாதுகாப்புத் தலைமையகத்திலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யும் இந்திய இராணுவத் தளபதிக்கு விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளதுடன் இரு நாட்டு இராணுவ தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்யும் இந்திய தளபதி இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படைவீரர்களின் நினைவிடத்திற்கு விஜயம் செய்யும் அவர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். அத்துடன் அநுராதபுர ஜயஸ்ரீமா போதிக்கும், சாலியபுர கஜபா ரெஜிமண்டிற்கும் விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts