தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?

கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘தீ இவன்’ படத்தை ஜெயமுருகன் டைரக்டு செய்து வருகிறார். கார்த்திக் என்றாலே படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற சர்ச்சையை பொய்யாக்கி, மிக குறுகிய நாட்களில், ‘தீ இவன்’ படத்தில் அவர் நடித்து முடித்து இருக்கிறார்.

இதுபற்றி டைரக்டர் ஜெயமுருகன் கூறியதாவது:-

‘‘கார்த்திக்கை வைத்து ‘தீ இவன்’ படத்தை ஆரம்பித்தபோது, திரையுலகை சேர்ந்த பலர் என்னை பயமுறுத்தினார்கள். உங்களுக்கு வேறு ‘ஹீரோ’ கிடைக்கவில்லையா’’ என்று கிண்டல் செய்தார்கள். அவர்கள் பயமுறுத்தியதால் நானும் பயந்தபடியே திருப்பூரில் படப்பிடிப்பை தொடங்கினேன்.

கார்த்திக் என் படத்துக்கு 20 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார். சொன்னபடி, அவர் எந்த பிரச்சினையும் செய்யாமல், இருபது நாட்களில் நடித்து முடித்து விட்டார்.

இடையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்குப்போய் சிகிச்சை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். அவரால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுபற்றி அவரிடமே கேட்டேன். அவர் சொன்ன பதில் என்னை நெகிழவைத்தது.

‘‘என்னிடம் சரியாக இருப்பவர்களிடம் நான் சரியாக இருப்பேன். தவறானவர்களிடம் தவறாக இருப்பேன். நான் தவறான ஆளாக இருந்தால், 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ என்று கார்த்திக் கேட்டார். என் அனுபவத்தில் அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல நடிகர். அவருக்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார்.’’

Related posts