தமிழில் புதிய கல்விக் கொள்கை வெளியானது

17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழிபெயர்ப்பு வெளியாகி, தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை மாற்றப்படும், மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டிருந்தன.
ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகி இருந்தது.
கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நிலையில், தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று தேசிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 155 பக்கங்களுடன் கூடிய மொழிபெயர்ப்பை மத்திய அரசின் சார்பில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related posts