பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்வு

பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராக பணிபுரிந்தார்.
இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு இடையிலும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.
இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இன்று (ஜனவரி 17) இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதலில் சோம், பின்பு ரம்யா பாண்டியன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரியோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்துக்கு ஆரி மற்றும் பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. அதில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு ரசிகர்களானவர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Related posts