கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவுடன் கலந்தாலோசித்து துறைமுக கடல் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பிராந்திய புவியரசியல் காரணிகள், நாட்டின் இறைமை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்த பின்னரே கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டமிடப்பட்டது என்று ஜனாதிபதி கூறினார். முதலீட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும் என்று ஜனாதிபதி விளக்கினார். கிழக்கு முனைய மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66% பங்களிப்பு செய்கிறது. 9% பங்களாதேஷுக்கும் மீதமுள்ளவை வேறு சில நாடுகளுக்கும் செய்யப்படும் மீள் ஏற்றுமதியாகும்.

51% உரிமை இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49% இந்தியாவின் “அதானி“ நிறுவனத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய வகையில் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்

இது குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணைந்து இந்த திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு தொழிற் சங்க தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

துறைமுக மேற்கு முனையத்தின் செயல்பாட்டை துறைமுக அதிகாரசபையிடம் ஒப்படைக்க விரும்புவதாக கூறிய ஜனாதிபதி, துறைமுக அபிவிருத்திக்கான திட்டங்களை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மத்தளை விமான நிலையம் மற்றும் நுரைச்சோலை மின் நிலையத்தை விற்பதற்கு கடந்த அரசாங்கம் வகுத்திருந்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக பெசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, துறைமுக அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts