விக்னேஸ்வரனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பிக்கள்..!

தமிழ்,சிங்கள மக்களுக்கிடையில் இடைவெளியை ஏற்படுத்தவும் தமிழ் இளைஞர்களை தூண்டிவிடவும் விக்னேஷ்வரன் முயல்வதாகவும் அவரின் கருத்துக்கள் தொடர்பில் விளக்கம் கோரப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தெற்கில் 60 வீதமான தமிழ் மக்கள் வாழ்க்கையில் அவர் வடக்கிற்கு சுயநிர்ணய உரிமை கோருவதாக குறிப்பிட்ட அவர் ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வாக முடியாதென்றும் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, தேசிய பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் மீண்டும் யுத்தத்தை உருவாக்க முயல்கின்றனர்.சிங்கள ,தமிழ் முஸ்லிம்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். லொலிபப் சாப்பிட கோரும் குழந்தையை போன்று சுயநிர்ணய உரிமை பற்றி சீ.வி. விக்கினேஷ்வரன் பேசுகிறார். தெற்கில் 60 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.அவர்களை மறந்து இவர் கோரிக்கை முன்வைக்கிறார்.

——

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களென தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில் கண்டனம் தெரிவித்ததோடு அவரை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போடவேண்டுமெனவும் கோரினர். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட எம்.பி. மனுஷ நாணயக்கார ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். ”பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் விக்கினேஸ்வரன் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் என்று கூறினார். எனவே அந்தக் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

ஆனால் இது ஒழுங்குப்பிரச்சினையல்ல. எந்தவொரு உறுப்பினருக்கும் தனது கருத்தை வெளியிட உரிமையுள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் பலரும் மாறி மாறி ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினர்.

நளின் பண்டார எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் ” நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்படமாட்டேன். பிரிவினைக்கு, பயங்கரவாதத்துக்கு ஒத்துழைக்கமாட்டேன் என பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தினுள்ளேயே சி.வி. அதனை மீறி விட்டார். எனவே அவரை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போட வேண்டும் என்றார்.

குருநாகல் மாவட்ட பொதுஜன பெரமுன எம்.பி. சாந்த பண்டாரவும் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து ” விக்கினேஸ்வரனின் கருத்து அரசியலமைப்புக்கு முரண் என்பதனால் அதனை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Related posts