ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது அவர், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், கல்வியாளர்களுடனான சந்திப்பையும் ரணில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

—–

நிறைவேற்ற முடியாத வாக்குறுதி; நான் என்றும் வழங்கியதில்லை – டக்ளஸ்

அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை நான் ஒருபோதும் வழிநடத்தியதில்லை என்பதுடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் எமது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதுமில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கடசியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பொது அமைப்புகள் மற்றும் மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவும், அதற்கு பின்னரான சூழலில் பாராளுமன்றத்தில் எமது அரசியல் பலத்தின் ஊடாகவும் எமது மக்களின் அரசியல் அபிலாசை களையும் வாழ்வியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் உண்மையாகவே உழைத்து வருகின்றோம்.

அதுவே இன்று நியமாகியும் உள்ளது.அதுமட்டுமல்லாது எல்லாக் காலத்திலும் நான் மக்களோடு வாழ்ந்து வருகின்றேன். அதனுடாக எமது மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் தெளிவாக அறிந்துகொண்டவன் நான். எனது ஆயுத வழிப்போராட்டத்தின் ஊடாகவும், தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவும் கிடைத்த அனுபவங்களில் இருந்தே, எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நம்பிக்கையோடு தீர்வு காண முயற்சித்து வருகின்றேன்.

அத்துடன் எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தீர்வுகளையும் கண்டும் கொடுத்திருக்கின்றேன். இருந்தும், போதிய அரசியல் பலம் எம்மிடம் இல்லாததால் இன்னும் தீர்க்கவேண்டிய எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம் எஞ்சியிருக்கின்றன. அத்துடன், நிலையான அரசியல் தீர்வும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

அந்தவகையில் எமது மக்கள் எந்தளவிற்கு என்னைப் பலப்படுத்தி, நான் முன்னெடுக்கும் வழிமுறையை பின்பற்று கின்றார்களோ அந்தளவிற்கு பிரச்சினைகளை தீர்த்து, உரிமைகளைப் பெற்று, கௌரவமான, சமத்துவமான வாழ்வை நோக்கி நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்த அமைச்சர், வரவுள்ள தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது கரங்களுக்கு அரசியல் பலத்தை தருவார்களானால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடியுமான அளவில் தீர்வை பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

—–

Related posts