திருமணத்துக்குப் பின் நடிகைகள் நடிக்க கூடாதா?

திருமணத்துக்குப் பின் காதல் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களிடம் ஏன் கேட்பதில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொந்தளித்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத்.

கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் வெளியான ‘யு டர்ன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். தமிழில் ‘இவன் தந்திரன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் நடிகைகள் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தன்னைப் பின் தொடர்பவர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளார்.
அதில் ஷரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:

“ஒரு நடிகையின் தேவை/ஆசை திருமணத்துக்குப் பின் காணாமல் போய்விட வேண்டுமா? நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல; ஒரு சாதாரண திரைப்பட நடிகை மட்டுமே. இதற்கான பதிலை நீங்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நண்பர்களே. தயவுசெய்து கலந்துரையாடுங்கள்.

ஒரு நடிகைக்கு விரைவில் திருமணமாக உள்ளது. அவர் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பாரா என்று சினிமாவைச் சார்ந்த ஒரு நபராலேயே கேட்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு கேள்வியை மிகவும் அலட்சியமாகவும் தயக்கமில்லாமலும் கேட்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

இது என்னைக் கோபம் கொள்ளச் செய்து என்னைச் சிந்திக்க வைத்தது. இதுகுறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க விரும்புகிறேன். திருமணமான ஒரு நடிகர் பெண்களுடன் ரொமான்ஸ் செய்வதில்லையா? இதுபோன்ற கேள்விகளை ஏன் அவர்களிடம் கேட்பதில்லை? இங்கே சில விஷயங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் பதில்களுக்கு நன்றி என்று ஷரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

Related posts