கொரோனா ஒழிப்புக்கு இலங்கை கிரிக்கெட் 25 மில். நன்கொடை

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ரூபா 2.5 கோடி நிதியை வழங்க முன்வந்துள்ளது.

உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 நோய் பரவுவதற்கு எதிராக இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்நன்கொடையை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு இம்முடிவை ஒருமனதாக எடுத்துள்ளதோடு, எதிர்வரும் சில நாட்களில் குறித்த நிதியை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இது தவிர, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, சுகாதார பிரச்சினைகள் குறித்து அதனை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலை தொடர்பில், இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களும் கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்குமாறும் அது தொடர்பில் தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறும், தமது சமூக வலைத்தள கணக்குகள் மூலம் விளையாட்டு இரசிகர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts