தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிப்போட்டு இருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும் மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

இதன்படி, இன்று நாடு முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக, வெளிநாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Related posts