விஜய், சூர்யா, கார்த்தி படங்கள் ரிலீஸ் தள்ளி வைப்பு?

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. புதிய படங்கள் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கபட்ட நிலையில் கொரோனாவால் சுல்தான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக படகுழுவினர் தெரிவித்து உள்ளனர்.

விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படங்களின் ரிலீசையும் தள்ளி வைப்பது குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி’ இந்தி படம் வருகிற 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.

இந்த படத்தின் ரிலீசை கொரோனா காரணமாக பார்வையாளர்களின் உடல்நலம் கருதி தள்ளிவைத்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக நோ டைம் டூ டை ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். தற்போது இன்னொரு ஹாலிவுட் படமான ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9’ ரிலீசையும் ஒரு வருடத்துக்கு தள்ளி வைத்து இருக்கிறார்கள்.

Related posts