பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு

படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.

இந்தியன்-2 படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே செல்வமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய விபத்தாக முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு தள விபத்து கடவுள் புண்ணியத்தால் சிறிய விபத்தாக முடிந்துள்ளது. காயம் பட்டவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். பெப்சி கட்டடம் உருவாக இறந்த உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஆர்.சந்திரன் முக்கியக் காரணமாக இருந்தார்.

தமிழ்த் திரைத்துறை அடுத்தகட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது, அதேபோல ஆங்கிலப் படங்களுக்கு இணையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சரியான உபகரணங்கள் இல்லாததால் தொழிற்சாலை உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு இங்கிருக்கும் பணியாளர்களுக்கு , ஓட்டுநர்களுக்கு கிடையாது. திரைத்துறை சாராத உபகரணங்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போது சம்மேளனத்தின் அனுமதி பெற்ற பிறகே தொழிலாளர்கள் இனிமேல் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள். படப்பிடிப்பு தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்

தனியார் படப்பிடிப்பு தளங்கள் பணியாளர்களின் மீது பொறுப்பு, கருணை இல்லாமல் இருக்கிறது. காலா, பிகிலை தொடர்ந்து ஈவிபி தளத்தில் இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள்.

விபத்து நடந்த பின்னர் சரியான நேரத்திற்கு அவசர ஊர்தி வந்து சேரவில்லை. பட நிறுவனம் காப்பீடு செய்துள்ளதால் இறந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.

90 சதவீத விபத்துகள் பெரிய படங்களில்தான் ஏற்பட்டுள்ளது. லைட் மேன், கிரேன் ஆப்பரேட்டர்களுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த விபத்து கொடுத்துள்ளது.

அஜித்திடம் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ரஜினி படமும் அடுத்த கட்டமாக தமிழகத்தில் படம்பிடிக்கப்பட உள்ளது.

80 சதவீத படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பது எங்களது நிபந்தனையாக இனி இருக்கும்.

மூன்று பணியாளர்களின் மரணம் இந்தியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளின் படப்பிடிப்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related posts