உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றுக்கான பிரார்த்தனை மற்றும் ஐந்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று (21) 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு ஆயர்களின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது.

அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கடுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஆராதனையில் பயங்கரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts