1 மணி நேர சந்திப்புக்கு ரூ.5 லட்சம்

தன்னை யாராவது சந்திக்க விரும்பினால், ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்” என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். தன்னை படைப்பாற்றல் மிகுந்த மேதைகளை நினைத்துக் கொள்ளும் நபர்களை சந்திப்பதில் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “புதியவர்களுக்கு உதவி செய்வதற்காக நிறைய நேரத்தை வீணடித்துள்ளேன். பெரும்பாலும் அவையனைத்தும் முட்டாள் தனத்துடன் முடிந்துள்ளது. ஆக, இன்று முதல் தன்னை படைப்பாற்றல் மிகுந்த மேதைகளை நினைத்துக்கொள்ளும் நபர்களை சந்திப்பதில் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, இனிமேல் என்னை சந்திப்பதற்கான தொகையை நிர்ணயித்துள்ளேன்.

யாராவது என்னை 10-15 நிமிடங்கள் சந்திக்க விரும்பினால், ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். அரைமணி நேரத்துக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்துக்கு ரூ.5 லட்சமும் செலுத்த வேண்டும். மக்களை சந்திப்பதில் நேரத்தை வீண்டித்து சோர்வடைந்துள்ளேன். இந்த தொகையை உங்களால் செலுத்த முடியும் என்று நினைத்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது தூர விலகி நில்லுங்கள்.

பணம் முன்கூட்டியே செலுத்த வேண்டும். தேவையில்லாமல் எனக்கு மெசேஜ் செய்ய வேண்டாம். பணம் செலுத்தினால் உங்களுக்கு நேரம் கிடைக்கும். நான் தொண்டு நிறுவனத்தை நடத்தவில்லை. அதேபோல குறுக்கு வழிகளை தேடும் மக்களை சந்தித்து சோர்வடைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ந்தப் பதிவுக்கு அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப், “இமெயில், மெசேஜ்களில் தங்களுடைய ஸ்கிரிப்டை எனக்கு அனுப்பி, அப்பாவிடம் ஃபார்வர்டு செய்ய சொல்பவர்களுக்கு இதை அனுப்பிவிடுகிறேன்” என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

Related posts