பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்

சர்ச்சை கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை கருத்துகளை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர்தான் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். எந்தளவிற்கு என்றால், டுவிட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் அளவிற்கு சர்ச்சைக்கு பேர் போனவர். அப்படி, நாட்டின் சுதந்திரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார் கங்கனா ரணாவத்.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. இந்தியாவுக்கு 2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். 1947-ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய விடுதலை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடானது எனக் கூறியுள்ள ஆனந்த் சர்மா, ‘மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல்’ ஆகியோரை கங்கனா ரணாவத் அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts