சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கம்

‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் மூலம் தங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு, “இரு கலைஞர்களுக்கும் முன்பணத் தொகையை வழங்கிவிட்டோம்” என மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்: “சுயாதீன இசையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும்‌ நோக்கத்துடன்‌ ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம்‌. எங்களின்‌ முதல்‌ வெளியீடான ‘என்ஜாய்‌ என்ஜாமி’யின்‌ வெற்றி எமக்கும்‌, இந்தப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும்‌ உலகளாவிய அங்கீகாரத்தைப்‌ பெற்றுத்‌ தந்துள்ளது. இந்த சாதனையைப்‌ படைத்தத்தற்காக நாங்கள்‌ பெருமைப்படுகிறோம்‌.

துரதிர்ஷ்டவசமாக இந்தப்‌ பாடலின்‌ வெற்றிக்குப்‌ பின்னால்‌ சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால்‌ இந்த வெற்றி பெரும்‌ சர்ச்சைக்குள்ளானது.
எங்கள்‌ நற்பெயருக்கு களங்கம்‌ ஏற்படுத்தும்‌ நோக்கில்‌ சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள்‌ கடுமையாக மறுக்கிறோம்‌. சுயாதீன கலைஞர்களின்‌படைப்புகள்‌ மற்றும்‌ சுயாதீன இசைக்கான எங்கள்‌ அர்ப்பணிப்புக்களில்‌ நாங்கள்‌ பொறுப்புடன்‌ இருக்கிறோம்‌.

மேலும்‌, நாங்கள்‌ எங்கள்‌ கடமைகளை சரியாக நிறைவேற்றாமல்‌ அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்திவைக்கும்‌ செயல்களை செய்யவில்லை.இருப்பினும்‌, நாங்கள்‌ நம்பியிருந்தது போல்‌ சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை.

அதுதவிர, கலைஞர்களின்‌ ஒப்பந்தக்‌ கடமைகளின்படி, அவர்களின்‌ நேரடி ஈடுபாடுகள்‌ மற்றும்‌ நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம்‌ பற்றி நாங்கள்‌ மீண்டும்‌ மீண்டும்‌ கோரிக்கை விடுத்தாலும்‌ அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச்‌ செயற்பாடுகளால்‌ நடைமுறைப்‌ பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும்‌ முயற்சிகள்‌ சிக்கல்‌ நிலையிலுள்ளது.

இருந்தபோதிலும்‌, சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம்‌ வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள்‌ சார்பாக கணிசமான செலவுகளையும்‌ மாஜா நிறுவனம்‌ பொறுப்பேற்றுள்ளது என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும்‌ எதிர்நோக்கும்‌ இந்தச்‌ சிக்கல்‌ நிலை நியாயமாகவும்‌ விரைவாகவும்‌ தீர்க்கப்படுவதன்‌ முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம்‌. சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில்‌ கொண்டு, உரிய வழிகளில்‌ அவற்றை நிவர்த்தியும்‌ செய்வோம்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. அறிவு எழுதிய இப்பாடலை தீ பாடியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் யூடியூபில் இதுவரை 48 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் பேசிய அவர், “என்ஜாய் எஞ்சாமி வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடலுக்கான 100 சதவீத உரிமை மற்றும் ராயல்டி எங்களிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரை இந்த பாடல் மூலம் எங்களுக்கு ஜீரோ வருமானம் மட்டுமே கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, மாஜா நிறுவனத்தை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தோம். இதில் சில சிறந்த, உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். எங்கள் யாருக்கும் இதுவரை எந்த வருமானமும் கிடைக்கவில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

Related posts