இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில்

இலங்கையில் நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகர் ஹரிஹரின் இசை நிகழ்ச்சி, இலங்கையில் கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிப்ரவரி 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி நேற்று (பிப்.9) யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக தமன்னா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், ரம்பா, சாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகை தமன்னா பாடல் ஒன்றுக்கு நடனமாடினார். இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், திறந்த வெளி அரங்கில் நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் தடைகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததால் கூட்டம் அதிகரித்தது. இதனால் ஏற்கெனவே உள்ளே டிக்கெட் வாங்கியிருந்தவர்கள் பலரும் அவதியடைந்தனர். மேலும், அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

அத்துமீறி நுழைந்தவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல் துறையினர் ஒருகட்டத்தில் அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், நிகழ்ச்சியில் பாதியில் நிறுத்தக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts