எமது போராட்டங்களை அடக்கவே நிகழ்நிலை காப்புச் சட்டம்

எமது போராட்டங்கள், எமது மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசாவின் ஊடக சந்திப்பு யாழ். கொடிகாமத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டம் ஆகிய இரண்டும் இன்று பேசு பொருளாகும். சுயமாக போராடும் இனத்தின் மீது கொண்டுவரப்பட்ட சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்.

எமது போராட்டங்கள், எமது மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டுவரப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் போது கூட அடக்குமுறை பாவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலை என்னவாக இருக்கும்.

சிங்கள தலைவர்கள் தாங்கள் ஆட்சியில் உள்ள போது ஒரு மாதிரியாகவும், இல்லாத போது இன்னொரு மாதிரியாகவும் செயல்படுகிறார்கள்.

இதுவரை காலமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாமே போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். எங்களுக்கும் வயது முதிர்ந்துள்ளது. ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் இந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Related posts