பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா.சங்கரன் காலமானார்

இயக்குநரும், ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவர் தனது 92 ஆவது வயதில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’, ‘மௌன ராகம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாது, ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ரா.சங்கரன் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

ரா.சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Related posts