ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.

புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கும் இலக்கினை ஜனாதிபதி ரணில் துரிதப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் அதற்கானதொரு அலுவலகத்தை ஜனாதிபதி ரணில் ஸ்தாபித்துள்ளார். அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ.கிருஸ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலகத்தின் ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts