இந்தியாவா, பாரதமா..? இனி 2 நாளைக்கு இதுதான் டிரெண்டிங்..!

ஜி20 மாநாடு தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் பாரதம் என்ற பெயர் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A.) என்ற பொருள்படும்படி இருக்கிறது.

இதனை பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அத்துடன் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தவிர்க்கத் தொடங்கியது. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் இந்தியாவின் பெயர் ‘பாரதம்’ என்று மாற்றப்பட்டது.

இந்த அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. வரும் 18ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் இன்று தொடங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, பாரதத்தின் பிரதமராக தன்னை அடையாளப்படுத்தினார். அதாவது, அவரது இருக்கையில் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என எழுதப்பட்டிருந்தது.

எனவே, இந்தியாவா, பாரதமா? என்ற வாதத்திற்கு, இந்த பெயர் பலகை மூலம், மத்திய அரசு சூசகமாக பதில் அளித்திருப்பதாக பேசப்படுகிறது. அதேசமயம் இந்தியாவா? பாரதமா? என்ற விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் மோடியை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். இனி இரண்டு நாளைக்கு இந்த விவகாரம்தான் டிரெண்டாக இருக்கும். இதேபோல் ஜி20 மாநாடு தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் பாரதம் என்ற பெயர் உள்ளது.

“பாரதம் ஜனநாயகத்தின் தாய்” என்ற தலைப்பில் அந்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. “பாரதம் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர். இது அரசியலமைப்புச் சட்டத்திலும், 1946-48 விவாதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அந்த சிறு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts