அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்த சூழலில், பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், நாடாளுமன்றம் சுமுகமுடன் நடைபெறுவதற்கான விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமும் இன்று காலை நடந்தது.
இந்த கூட்டத்தில் காலை 10.40 மணியளவில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
இதில், மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
கூட்டத்தொடரில் பங்கேற்க காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் மற்றும் எம்.பி.யான சோனியா காந்தி இன்று வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது வெற்றி பெறாது என்றும் கூறப்படுகின்றது.

Related posts