கொழும்பு – KKS ரயில் பாதை

பாதை, சமிக்ஞை கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்டதும் முன்னரைவிட பயண நேரத்தில் ஒன்றரை மணி நேரத்தை மீதப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

நவீனமயப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு காங்கேசன்துறை ரயில் பாதையின் சமிக்ஞை (சிக்னல்) கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் 462 கோடி ரூபா (15 மில்லியன் டொலர்) நிதிக்கான அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது அனுராதபுரத்திலிருந்து மஹவ வரையில் இந்த ரயில் பாதையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நடவடிக்கைகளை இரண்டு மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நவீன மயப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்நிதிக்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு காங்கேசன்துறை ரயில் பாதையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர், காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கான பயண நேரம் தற்போதைய நேரத்தை விட ஒன்றரை மணி நேரத்தால் குறைவடையுமென்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts