இலங்கை இதழியலில் சிவகுருநாதன்

தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான கலாசூரி சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர்.

தினகரன் பத்திரிகையில் நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றிய கலாசூரி சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் வல்லவர். அவருடைய எழுத்துக்களும் சாதாரண வாசகர்களால் படிக்கக் கூடியவையாகும்.

இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளது.

தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை எவராலும் மறக்க முடியாததாகும். அவரது ஆளுமை இன்றும் அவரது அபிமானிகளால் நினைவுகூரப்படுகின்றது. அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக (08/08/2003) ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூலை ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்துள்ளார்.

‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலில் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்த கலாசூரி சிவகுருநாதன் ஆற்றிய பெருங்கடமையை ஊடக, இலக்கிய அறிஞர்களின் திறனாய்வு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.

‘ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களம் தந்த தினகரன் சிவகுருநாதன்’ எனும் பகுதியில் அவரைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளும், திறனாய்வு ஆக்கங்களும் உள்ளடங்குகின்றன. பல ஊடக ஆளுமையாளர்கள் அவற்றை எழுதியுள்ளனர்.

இரண்டாம் அங்கம் ‘பத்திரிகை ஆசிரியர்களுள் – மக்கள் திலகம்’ எனும் பகுதியாக அவரைப் பற்றிய அரசியல் வல்லுநர்களின் அஞ்சலிகளும், ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நூலில் ‘பூமாலைக்கு ஏன் பாமாலை’ எனும் மூன்றாம் பகுதியில் கவிதைகளில் தெரிந்த சிவகுருநாதன் சிந்தனைகளை பல கவிஞர்கள் வடித்துள்ளனர். தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கலாசூரி சிவகுருநாதன் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன்னின்றமைக்கு சாட்சியமாக இக்கவிதைகள் உள்ளன.

Related posts