கேலி செய்தவர்களுக்கு காஜல் அகர்வால் பதில்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார், 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “நான் கர்ப்பமாக இருந்தபோது குண்டாகி விட்டேன் என்று என்னை கேலி செய்தார்கள். என் மகன் நீல் பிறந்த சில மாதங்களிலேயே திரும்பவும் படப்பிடிப்புக்கு சென்றேன்.

அப்போதும் குழந்தையை விட்டு விட்டு இப்படி நடிக்க போகலாமா? என்று கேலியும், விமர்சனமும் செய்தார்கள். யார் என்ன நினைத்தாலும் மகனுக்குத்தான் என் முதல் முக்கியத்துவம். முதல் முறையாக அவனை மார்போடு அணைத்தபோது நன்றாக வளர்க்க முடியுமா என்று பயந்தேன்.

ஆனால் எல்லாவற்றையும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு என்னை சரி செய்து வருகிறேன். தினமும் காலையில் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்காக செல்லும்போது என் மனம் வேதனையோடு துடிக்கிறது. அதற்காக அவனை அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் அல்ல.

நீலுக்காக நேரத்தை ஒதுக்கி கொள்வதும், அவனுக்கு அன்பை பகிர்வதும், அவன் நல்லது கெட்டது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு என் பணியையும் பார்த்துக்கொள்கிறேன். என் மகன் முன் நான் ஒரு பலமான தாயாக நிற்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

Related posts