தமிழ் அரசியல் கைதி 14 வருடங்களின் பின் விடுதலை

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அதிநவீன உபகரணங்களை கடத்திய குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கனகரத்தினம் ஆதித்யன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையத்தில் ஒப்படைக்கச் சென்ற வாகனம் வவுனியா – இரட்டைபெரியகுளத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

இவர் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மன்றில் ஆஜராகி விடயங்களை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts