எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் 3ஆவது முறையாக இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 03ம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.

குறித்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பல மாகாணங்களிலும் ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்த நிலையில், அவை அனைத்தும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தேர்தலைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இப்போராட்டம் கலவரமாக மாறியிருந்ததது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகின்றது.

ஜனவர் 06 இடம்பெற்ற குறித்த போராட்டம் மற்றும் கலவரங்களுக்கு சார்பாக கருத்து வெளியிட்ட ட்ரம்பின் Facebook மற்றும் Instagram கணக்குகள் ஜனவரி 2021இல் முடக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதமளவில் Facebook நிறுவனம் 2 வருடங்களுக்கு அத்தடையை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய அவரது Facebook பக்கத்தை பார்வையிட முடியுமாக இருந்த போதிலும் அதில் எவ்வித இடுகைகளையும் இட முடியாத நிலையில் அது பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் Twitter வலைத்தளத்திலும் வெறுப்பூட்டும் கருத்துகளை பதிவு செய்ததாக டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவரது ட்விட்டர் கணக்கு கடந்த ஜனவரி 08, 2021 இல் நிரந்தரமாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts