முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்

முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்’ என நடிகர் திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு தீபாவளி பண்டிகையின் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார். ”எங்கள் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
தீபாவளி பண்டிகையை அன்றும் இன்றும் குதூகலமாகவே கொண்டாடி வருகிறோம். சின்ன வயதில் நானும் எங்க அண்ணன் ராம்குமாரும் பெங்களூருவில் உள்ள பிஷப் கார்டன் கான்வென்டில் படித்து வந்தோம்.
தீபாவளிக்காக விடுமுறையில் சென்னை வருவோம். அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் அப்பாவின் மாமா மகள் பொன்னம்மாள் தலைக்கு எண்ணெய் வைத்து விடுவார்.
குளித்து முடித்ததும் தாத்தா, பாட்டி போட்டோக்களின் முன்பு நின்று புத்தாடைகளை வாங்கிக் கொள்வோம். அதை அணிந்த பின் பட்டாசு கொளுத்த ஆரம்பிப்போம். முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்.
சித்தப்பா, பெரியப்பா வேடிக்கை பார்ப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் நிறைய பேர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். எங்க வீட்டில் உள்ள ‘ஜனதா டேபிளில்’ அமர்ந்து சாப்பிடுவோம். அந்த டேபிளில் ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.
அம்மா, சித்தி ஆகியோர் பரிமாறுவார்கள். இரவில் ராக்கெட் வெடி அமர்க்களப்படும்.
அப்பா நடித்த படம் ரிலீசானால் சாந்தி தியேட்டருக்கு போய் பார்ப்போம். இப்போதும் உறவினர்கள், நண்பர்களுடன் எங்கள் வீட்டில் தீபாவளியை உற்சாகமாகவே கொண்டாடி வருகிறோம்.

Related posts