இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் – ரஷியா இடையேயான போர் உலக பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகிறது. மேலும், போரால் கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. அதேவேளை, முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

மேலும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகளின் வெளியேற்றல் போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது. வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. வர்த்தகம் தொடங்கியது முதல் சந்தையில் முதலீடுகள் வெளியேற்றம், முதலீடுகளை டாலருக்கு மாற்றுதல், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் – ரஷியா போர் உள்பட பல காரணங்கள் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதுமே அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 82.68 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று முன் தினம் வர்த்தக இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.32 ஆக நிறைவடைந்திருந்த நிலையில் இன்றுகாலை வர்த்தம் தொடங்கியது முதலே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி 82.68 ரூபாயாக உள்ளது.

Related posts