இடைக்கால பட்ஜெட் – முழு விபரம் இணைப்பு!

இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

இலங்கையின் முரண்பாட்டு அரசியலே பொருளாதார பின்னடைவுக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம்.

2022 ஆம் ஆண்டின் இந்த வரவுசெலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுடன் கூடிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1) பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்

2) கல்வி, சுகாதாரம் உட்பட்ட பல்வேறு பொது விடயங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3) அரச நிறுவனங்களில் மோசடிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

4) பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேவைகளை விஸ்தரிக்கும் வகையில், சில பிரதேசசபைகளை, அண்மையில் உள்ள நகரசபைகளுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

5) அரச சேவைகளில் ஓய்வூதிய வயது 60 வயதாக வரையறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அரச சேவையில் 60 வயதானவர்கள், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியன்று ஓய்வுப்பெறுவர்.

6) ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மின்சாரசபை, எரிபொருள் கூட்டுத்தாபனம் உட்பட்ட 50 நிறுவனங்கள் தொடர்பில் எதிர்கொண்டு வரும் நட்டங்கள் காரணமாக, மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts