இந்தியாவும், உதவி செய்ய போவது கிடையாது

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எமது தலைமுறை கடந்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்த காரணமானது.

எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டது.

இந்தியாவும், ஜப்பானும், ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை ஏற்படுத்துவோம்

வடக்கில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை பெரும்பாலும் இன்று பொதுவான பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. நாம் அனைவரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்நுழைய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போதே நாங்கள் அனைத்து வகையான இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து செயற்ப்பட முடியும்.

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற பேதமின்றி நாங்கள் ஒன்றிணைய வேண்டும். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

எனது காணாமல் போனோரின் உறவுகள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எனது சகோதரன் காணாமல் போயிருந்தார்.

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மையை தேடும் சபை ஒன்றை உருவாக்குமாறு நாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அப்போது இருந்த அரசு அதனை ஏற்கவில்லை.

மக்கள் தங்களுக்குரிய மொழியில் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமை காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பாரிய திருப்புமுனை ஏற்படவேண்டும் என்றார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts