பாடகர் கே.கே. வின் இறுதி நிமிடங்கள்..!

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார். அதில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும். 53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.

கேரளத்து தம்பதிக்கு மகனாக பிறந்த கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார். ரசிகர்கள் பலர் தங்களது டுவிட்டரில் மறைந்த பாடகர் கேகேவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது. மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் சாமிக் பட்டாச்சார்யா கூறும் போது 3 ஆயிரம் பேர் கூடகூடிய இடத்தில் 7 ஆயிரம் பேர் கூடி உள்ளனர் என கூறினார். இதற்கு பதில் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாஜக தனது கழுகு அரசியலை நிறுத்த வேண்டும்.

அவரது மரணம் உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமாக இருக்கிறோம். ஆனால் பாஜக செய்வதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. காவி முகாம் அதன் கழுகு அரசியலை நிறுத்த வேண்டும். அவர்கள் மரணத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.

முதல் மந்திரி மம்தா அறிவித்தபடி, பாடகர் கே.கே உடலுக்கு, மேற்குவங்க அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தபட்டது. ரவீந்திர சதன் கலாச்சார மையத்தில் வைக்கப்பட்ட பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Related posts