நிலையான சம்பளம் பெறும் ஊழியர்களே அதிக ஆபத்தில்

அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர், அவர்களுக்குத்தான் அதிக ஆதரவு தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, ​​அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியாது” என அவர் கூறினார்.

வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“தனியார் துறையில் இருந்தாலும், அத்தகைய நபர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினரே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர், அவர்களே இப்போது பொறுப்பேற்று சரியானதைச் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் தனது தேசத்தின் மக்களை தோல்வியடையச் செய்துள்ளது என்பதை முழு உலகமும் இப்போது உணர்ந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பொருளாதாரத் தலைவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோத்தபாய ராஜபக்ஷ தவறு செய்திருந்தால், அப்பாவி மக்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியதில்லை, தண்டிக்கப்பட வேண்டியதில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 டிரில்லியன் ரூபாவுக்கு மேல் அச்சிட்டுள்ளதாகவும், பணத்தை அச்சடிப்பதன் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“பணத்தை அச்சடிப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது, இதனால் வாழ்க்கைச் செலவு உயரும் என்பதை நாங்கள் முன்னறிவித்துள்ளோம். ஆனால், இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் மற்ற வரவு செலவுத் திட்டங்களில் குறைக்கும் வழிகளை ஆராய வேண்டும் மற்றும் அதற்குப் பதிலாக குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீதிகள் மற்றும் கூடுதல் செலவினங்களை உருவாக்குவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அந்த நிதி நாட்டுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts