மகன் உரிமை கோரிய தம்பதிக்கு தனுஷ் தரப்பு நோட்டீஸ்

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்தது. இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related posts